ADDED : பிப் 26, 2025 02:14 AM
புதுடில்லி, அடுத்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதற்கான வரைவு விதிமுறைகளுக்கு சி.பி.எஸ்.இ., ஒப்புதல் அளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் பிப்., - மார்ச் மாதங்களில் நடத்தப்படுகின்றது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூலையில் நடக்கும் துணைத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு இருமுறை 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு பரிந்துரைத்தது.
இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதற்கான வரைவு விதிமுறைகளுக்கு சி.பி.எஸ்.இ., நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வரைவு விதிமுறைகள் மார்ச் 9 வரை பொது தளங்களில் வெளியிடப்பட்டு சம்பந்தப்பட்டோரின் கருத்துகள் பெறப்படும்.
இந்த வரைவு விதிமுறையின்படி, முதற்கட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பிப்., 17 முதல் மார்ச் 6 வரையிலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வை மே 5 முதல் 20 வரை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.