ADDED : மே 09, 2024 05:20 AM

பெங்களூரு : பெங்களூரில் மழை தொடர்ந்து பெய்கிறது. மரங்கள் சாய்ந்து விழுந்ததால், சாலையில் நடந்து சென்ற மக்கள் பீதி அடைந்தனர்.
கர்நாடகாவில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், வெயிலுக்கு இதமாக கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கடந்த 6ம் தேதியில் இருந்து, தினமும் மாலை நேரத்தில் மழை பெய்கிறது. நேற்றும் காலை வழக்கம்போல வெயில் அடித்தது. மாலை 4:00 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.
சிவாஜிநகர், விதான்சவுதா, மெஜஸ்டிக், ராஜாஜிநகர், பசவேஸ்வராநகர், ஆர்.ஆர்.நகர், கெங்கேரி, இந்திராநகர், ஜெயநகர், கோரமங்களா, மல்லேஸ்வரம், ஓக்லிபுரம், கே.ஆர்., மார்க்கெட் உட்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மாநக ராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தில் 16; ஆர்.ஆர்., நகரில் 70, பொம்மனஹள்ளியில் 2, மேற்கில் 30, எலஹங்காவில் 7, கிழக்கில் 24, தாசரஹள்ளியில் மூன்று இடங்களில் என 152 இடங்களில், மரங்கள் சாய்ந்தும், மரக்கிளைகள் முறிந்தும் விழுந்தன. சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
பெரும்பாலான இடங்களில், சாலையில் மழைநீர் வெள்ளம் போல, பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மெதுவாக சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.
பகலில் வெயில் அடித்தாலும், மாலையில் மழை பெய்வது, பெங்களூரு நகரவாசிகளை மகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது. வீட்டின் மொட்டை மாடி, தெருவில் நின்று சிறுவர்கள் மழையில் நனைந்து, ஆட்டம் போடுகின்றனர்.