டாக்டரிடம் ரூ.1.27 கோடி 'அபேஸ்' அசாம் மாநிலத்தின் இருவர் கைது
டாக்டரிடம் ரூ.1.27 கோடி 'அபேஸ்' அசாம் மாநிலத்தின் இருவர் கைது
ADDED : செப் 09, 2024 04:39 AM
சித்ரதுர்கா மும்பை போலீஸ் பேசுவதாக கூறி, டாக்டரிடம் 1.27 கோடி ரூபாய் அபேஸ் செய்த வழக்கில், அசாம் மாநிலத்தின் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் சீனிவாஸ் ஷெட்டி, 70; டாக்டர். இவரது மொபைல் போனுக்கு, கடந்த மாதம் 23ம் தேதி ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசியவர், 'மும்பை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறினார். உங்கள் வங்கிக்கணக்கு எண்ணை பயன்படுத்தி, சைபர் கிரைம் மோசடி நடக்கிறது.
'இதனால் உங்கள் வங்கிக்கணக்கு விபரங்களை பரிசோதிக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்' என்றார்.
பயந்து போன சீனிவாஸ் ஷெட்டி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறினார்.
வங்கிக்கணக்கு எண், ஏ.டி.எம்., கார்டு நம்பர் உள்ளிட்ட விபரங்களை அனுப்பி வைத்தார். அவரது வங்கிக் கணக்கில் இருந்து 1.27 கோடி ரூபாய், வேறு வங்கிக் கணக்குகளுக்கு சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் ஷெட்டி, தன்னிடம் மொபைல் போனில் பேசியவரை, தொடர்பு கொண்டு பேச முயன்றார்.
ஆனால் அந்த நம்பர் 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சித்ரதுர்கா சைபர் கிரைம் போலீசில் கடந்த மாதம் 26ம் தேதி புகார் செய்தார்.
இந்நிலையில், சீனிவாஸ் ஷெட்டியை ஏமாற்றி பணம் அபேஸ் செய்த, அசாம் மாநிலத்தின் பவன்குமார், 35, ஜாகிர் போரா, 55 ஆகியோரை, நேற்று முன்தினம், சித்ரதுர்கா சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 16.89 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.