ADDED : மே 27, 2024 02:00 AM

நாசிக் : மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள பிரபலமான நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி 26 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
வரி ஏய்ப்பில் ஈடுபடும் நகைக் கடை அதிபர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கு இடமான பணப் பரிவர்த்தனை மற்றும் உயர் மதிப்பிலான பணப் பரிவர்த்தனையின் அடிப்படையில் வரித்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் பிரபலமான சுரானா ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை அதிபரை, வரித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இவரது பணப் பரிவர்த்தனையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
நாசிக், ஜல்கொண்டான், நாக்பூர் ஆகிய நகரங்களில் இந்த சோதனை நடந்தது.
அப்போது, 26 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும், கணக்கில் வராத, 90 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் நாற்காலி, மேஜை ஆகியவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அந்த மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்து, அதிலிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, வருமான வரித்துறையினர் லாரியில் ஏற்றிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

