மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? சித்தராமையா மனைவிக்கும் வழங்கியது அம்பலம்!
மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? சித்தராமையா மனைவிக்கும் வழங்கியது அம்பலம்!
ADDED : ஜூலை 03, 2024 02:32 AM

மைசூரு, கர்நாடகாவில், மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் சார்பில், வீட்டுமனைகள் ஒதுக்கியதில், 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கும் நிலம் வழங்கியது அம்பலமாகியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் சார்பில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு, குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத், இரண்டு நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, வாரியத்தின் கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். முறைகேடு குறித்து விசாரணை நடத்த, இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின், 'எக்ஸ்' பதிவு:
மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாமல், பணியிட மாற்றம் செய்தது ஏன்? முதல்வர், யாரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
இந்த பிரமாண்ட முறைகேட்டை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு நிலம் கொடுக்க அனுமதி வழங்கியது யார்.
முதல்வரின் சொந்த ஊரில், முதல்வரின் ஆதரவு அமைச்சரின் துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதில் முதல்வரின் பங்களிப்பு இல்லாமல் இருக்குமா? கோல்மால் சி.எம்., இவர்.
இவ்வாறு அசோக் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
மைசூரு அருகே கேசரே கிராமத்தில் என் மனைவி பார்வதி பெயரில், 3.16 ஏக்கர் நிலம் இருந்தது. திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனமாக, அந்த நிலத்தை என் மச்சான், என் மனைவிக்கு கொடுத்தார். மைசூரு நகர வளர்ச்சிக்கு அந்த நிலத்தை என் மனைவி கொடுத்தார்.
பா.ஜ., ஆட்சியில், அரசின் வளர்ச்சி பணிகளுக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு, 50 சதவீத நிலம், 50 சதவீதத்திற்கு இழப்பீடு தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், என் மனைவிக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருந்தபோது அவருக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.