'1,100 மரங்கள் வெட்டுவதற்கு சக்சேனா உத்தரவே காரணம்'
'1,100 மரங்கள் வெட்டுவதற்கு சக்சேனா உத்தரவே காரணம்'
ADDED : ஜூன் 27, 2024 01:41 AM

ரோஸ் அவென்யூ:“வன அதிகாரிகளின் ஆட்சேபனையை மீறி துணைநிலை கவர்னர் உத்தரவின்பேரிலேயே தெற்கு ரிட்ஜின் சத்பரி பகுதியில் 1,100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன,” என, மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் குற்றஞ்சாட்டினார்.
சத்தர்பூரில் இருந்து தெற்காசிய பல்கலைக்கழகத்திற்கு சாலை அமைப்பதற்காக தெற்கு ரிட்ஜின் சத்பரி பகுதியில் 1,100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மரங்களை வெட்டுவது தொடர்பாக தனது உயரதிகாரிகளுக்கு டி.டி.ஏ., அதிகாரி ஒருவர் அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டி, அமைச்சர் சவுரப் பரத்வாஜ் நேற்று முன்தினம் கூறியதாவது:
வனத்துறை அதிகாரிகளின் ஆட்சேபனையையும் மீறி, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவின் உத்தரவின் பேரில், 1,100 மரங்கள் வெட்டப்பட்டன.
அந்த இடத்தில் மரங்களை வெட்ட அனுமதி இல்லை என்பதை வனத்துறை மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணையம் அறிந்திருந்தும், கவர்னர் உத்தரவின்பேரில் மரங்கள் வெட்டப்பட்டன.
இந்த முழு விவகாரத்திலும் அனைவருக்கும் தொடர்பு உள்ளது. வனத்துறை, டி.டி.ஏ., துணைநிலை கவர்னர் ஆகிய அனைவரும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து, உச்ச நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்.
2024 பிப்ரவரி 3ல் சத்பரி வனப் பகுதிக்குச் சென்று மரங்களை வெட்ட துணை நிலை கவர்னர் உத்தரவிட்டதாக டி.டி.ஏ., அதிகாரியின் மின்னஞ்சல் அம்பலப்படுத்துகிறது. இந்த உத்தரவுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக தன் பதவியை துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ராஜினாமா செய்ய, அமைச்சர் திங்கட்கிழமை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.