பிரஜ்வல் மனு மீது ரகசிய விசாரணை பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை
பிரஜ்வல் மனு மீது ரகசிய விசாரணை பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை
ADDED : ஆக 30, 2024 06:25 AM

பெங்களூரு: பிரஜ்வல் தொடர்பான ஜாமின் மனுவை, ரகசியமாக விசாரணை நடத்தும்படி, அவரால் பாதிப்புக்குள்ளான பெண்களின் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
ஹாசன் முன்னாள் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஜாமின் வழங்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதிப்புக்குள்ளான பெண்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிவர்மா குமார் வாதாடுகையில், ''பாதிக்கப்பட்ட பெண்களின் கவுரவத்தை பாதுகாக்கும் வகையில், ஜாமின் மனுக்கள் மீது ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி, ''இந்த விஷயத்தில், எந்த முடிவாக இருந்தாலும், தலைமை நீதிபதி தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது, இது குறித்து பரிசீலிக்கலாம்,'' என்றார்.
செப்டம்பர் 5ம் தேதிக்கு விசாரணைஒத்திவைக்கப்பட்டது.

