ADDED : ஜூன் 20, 2024 01:43 AM
அயோத்தி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலில் சஹஸ்ர சீமா பால் என்ற துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வீரர் சத்ருகன் விஸ்வகர்மா என்பவர் பணியில் இருந்தார்.
அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சத்ருகன் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் சத்ருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இந்த கோவில் வளாகத்தில், ஆயுதப்படை காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது கை தவறுதலாக பட்டதில் துப்பாக்கி வெடித்து அவர் பலியானார். நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவம் இந்த கோவில் வளாகத்தில் நடந்த இரண்டாவது விபத்தாகும்.