நான் முதல்வராக நீடிக்க வேண்டாமா? குருபர் சமூகத்தினரிடம் சித்து கேள்வி!
நான் முதல்வராக நீடிக்க வேண்டாமா? குருபர் சமூகத்தினரிடம் சித்து கேள்வி!
ADDED : மே 06, 2024 05:17 AM

தாவணகெரே, : ''நான் முதல்வராக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா,'' என்று, குருபர் சமூகத்தினரிடம், முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.
தாவணகெரேயில் குருபர் சமூக தலைவர்களுடன், முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் இரவு, லோக்சபா தேர்தலை ஒட்டி ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மாநிலத்தில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தான், எனது தலைமைக்கு பெயர் கிடைக்கும். நான் முதல்வராக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு நான் வேண்டுமா; தாவணகெரேயில் சுயேச்சையாக போட்டியிடும் வினய்குமார் வேண்டுமா.
அவருக்கு போடும் ஓட்டு, பா.ஜ.,வுக்கு போய் சேரும். ஐந்து வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்தியது நானா, வினய்குமாரா. அவர் வெற்றி பெற்றாலும், அவரால் மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற முடியுமா.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்தராமையா கூறியது பற்றி வினய்குமார் கூறுகையில், ''தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, முதல்வர் சித்தராமையா தோள் மீது உள்ளது. இதனால் எனக்கு எதிராக பேசுகிறார். எனது பெயரை அவர் பயன்படுத்துவது, எனக்கு கிடைத்த பாக்கியம்.
''காகினாலே மடாதிபதியும், முதல்வர் சித்தராமையாவும் என்னை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று, கேட்டு கொண்டனர். ஆனால் தொகுதி மக்களுக்காக போட்டியிடுகிறேன். ஷிவமொகா சுயேச்சை வேட்பாளர் ஈஸ்வரப்பா மூத்த அரசியல்வாதி. அவரை பற்றி பேச மாட்டேன்,'' என்றார்.