ADDED : ஜூலை 24, 2024 01:32 AM
அணுசக்தியை இந்தியாவின் மின் உற்பத்தித் துறையின் கணிசமான அங்கமாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அணுசக்தி மின்சாரத்தை பொறுத்தவரை, பழைய முறையிலான பெரிய அணு உலைகள் தற்போது உள்ளன.
அதற்கு பதிலாக செலவு குறைந்த, எளிதில் அமைக்கப்படும் வகையிலான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய அணு உலைகளை அமைத்து நகரங்களின் மின் தேவையை தீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அணு உலைகள், 300 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யக்கூடியவையாக இருக்கும்.
அதே போல் அனல் மின்சார உற்பத்தியில், என்.டி.பி.சி., மற்றும் 'பெல்' கூட்டு முயற்சியுடன் மேம்பட்ட அதிநவீன அனல்மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில், 800 மெகாவாட் ஆலையை அமைக்க அரசு நிதியுதவி வழங்க உள்ளது.
மேலும், எரிசக்தி சிக்கனம் என்ற இலக்கில் இருந்து தற்போது, மாசு கட்டுப்பாடு என்ற இலக்கை நோக்கி எரிசக்தி துறையை மாற்றுவதற்கான விதிமுறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை கட்டுப்படுத்த உள்ளனர். கார்பன் உமிழ்வை குறைக்கும் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க உள்ளது.