ADDED : மே 03, 2024 06:51 AM
மைசூரு: ஓட்டுப்பதிவுக்கு வசதியாக, மைசூரு - கார்வார், மைசூரு - ஷிவமொகா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலின், இரண்டாம் கட்ட ஓட்டு பதிவு மே 7ல் நடக்கவுள்ளது. மைசூரு மற்றும் கார்வாரில் உள்ள, ஷிவமொகா தொகுதி வாக்காளர்கள் ஓட்டு போட செல்வர். இவர்களுக்கு உதவியாக, மைசூரு - கார்வாட் இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மைசூரில் இருந்து, மே 6ம் தேதி இரவு 9:30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுநாள் காலை 9:00 மணிக்கு, ஷிவமொகாவின் தாளகொப்பாவை அடையும். மே 7ம் தேதி மாலை 6:30 மணிக்கு, தாளகொப்பாவில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு, மைசூரை சென்றடையும்.
அதேபோன்று, மே 6ம் தேதி இரவு 8:15 மணிக்கு மைசூரில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும். மறுநாள் மதியம் 1:00 மணிக்கு, உத்தரகன்னடாவின், கார்வாரை அடையும். அதே நாள் இரவு 10:00 மணிக்கு, கார்வாரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6:25 மணிக்கு மைசூரை அடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.