சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிவாஜிநகரில் இன்று திறப்பு
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிவாஜிநகரில் இன்று திறப்பு
ADDED : செப் 01, 2024 11:35 PM

சிவாஜிநகர்: பெங்களூரு சிவாஜிநகரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இன்று திறக்கப்படுகிறது.
பெங்களூரு சிவாஜிநகர் பிராட்வேயில் நவீன வசதிகளுடன் கூடிய, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது.
இன்று மாலை 4:00 மணிக்கு திறப்பு விழா நடக்கிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மருத்துவ கல்வி அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல், சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதயம் தொடர்பான பிரச்னை, நரம்பு அறுவை சிகிச்சை, சிறுநீரகம் தொடர்பான பிரச்னை, முக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதிநவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை மையங்கள், இ.சி.ஜி., - இ.இ.ஜி., - இ.சி.ஹெச்.ஓ., எடுக்கும் வசதிகள்; ஆய்வகம்; மருந்தகம்; விபத்துக்கு சிகிச்சை அளிக்கும் வசதியும் உள்ளது.
அவசர சிகிச்சைக்கு 15; இதயம் தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெறுவோருக்கு 10; சிறப்பு வார்டுகளுக்கு 6; செமி சிறப்பு வார்டுகளுக்கு 9; பொது வார்டுக்கு 100 படுக்கைகள் இருக்கும்.
எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் கூறுகையில், ''சிவாஜி நகரில் உலக தரம் வாய்ந்த மருத்துவமனை அமைக்கப்படும் என்ற, எனது கனவு நிறைவேறி உள்ளது.
''இந்த மருத்துவமனை எனது சிவாஜி நகர் தொகுதி மக்களுக்கு மட்டும் இல்லை. சிவாஜிநகர் மக்கள், மாரடைப்பால் பாதிக்கப்படும் போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி மருத்துவமனைக்கு செல்ல, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
''இதனால் சிலர் உயிரிழந்து உள்ளனர். எனது நண்பர்கள், உறவினர்களை இழந்து உள்ளேன். இதனால் சிவாஜிநகரில் அதிநவீன வசதியுடன் கூடிய, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்படுகிறது.
''இதற்கு உதவியாக இருந்த, இன்போசிஸ் நிறுவனர் சுதா நாராயணமூர்த்திக்கு எனது நன்றி,'' என்றார்.