பா.ஜ., விளம்பர தடை வழக்கு தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
பா.ஜ., விளம்பர தடை வழக்கு தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : மே 28, 2024 12:00 AM

புதுடில்லி : மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் குறித்து பா.ஜ., வெளியிட்டுள்ள பத்திரிகை விளம்பரங்கள் தரம் தாழ்ந்து இருப்பதாக கூறிய உச்ச நீதிமன்றம், பா.ஜ.,வின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலையொட்டி, இம்மாநில அரசியல் கட்சிகள் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்து வருகின்றன.
பா.ஜ., சமீபத்தில் வெளியிட்ட பத்திரிகை விளம்பரங்களில், திரிணமுல் காங்., கட்சியையும் அதன் தொண்டர்களையும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து இருப்பதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது.
பா.ஜ.,வின் இந்த செயல், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்றும், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது. இதற்கிடையே, இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்கக்கோரி, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் திரிணமுல் காங்., மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதி வரை, பத்திரிகையில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ., தரப்பு மேல்முறையீடு செய்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பா.ஜ., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.பட்வாலியா வாதிடுகையில், ''அந்த விளம்பரங்களில் இடம் பெற்ற உள்ளடக்கங்கள் உண்மைகளை அடிப்படையாக கொண்டது. இதில், எங்கள் தரப்பை விசாரிக்காமல் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது,'' என்றார்.
அதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அந்த விளம்பரங்களை நாங்களும் பார்த்தோம். அந்த விளம்பரங்களின் உள்நோக்கம் தரம் தாழ்ந்ததாக உள்ளது. நீங்கள் தான் சிறந்தவர்கள் என நீங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், வன்முறையை மேலும் ஊக்குவிக்க நாங்கள் கைகொடுக்க விரும்பவில்லை. எனவே, இந்த மனுவில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை.
உங்களின் எதிராளிகள், எதிரிகள் அல்ல. வாக்காளர்களின் நலன் கருதி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிய வில்லை. பிரச்னையை தீவிரமாக்க வேண்டாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து மனு திரும்பப் பெற பா.ஜ., தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரியதை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.