மே.வங்கத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி: கண்ணீர் புகை குண்டு வீச்சு
மே.வங்கத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி: கண்ணீர் புகை குண்டு வீச்சு
UPDATED : ஆக 27, 2024 01:34 PM
ADDED : ஆக 27, 2024 01:31 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, போராடும் மாணவர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர்; தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) கோல்கட்டா, ஹவுராவில் தலைமை செயலகத்தை, ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட முயன்றனர். 'பெண் டாக்டர்கள் கொலைக்கு நீதி வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணீர் புகை குண்டு வீச்சு
போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டினர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, மேற்குவங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.