ADDED : மே 12, 2024 02:13 AM
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடைய ஆறு இடங்களில் நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீரில், லஷ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், அல் - குவைதா, ஜெய்ஷ் - இ - முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள், பல்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் தங்கள் இயக்கத்தை விரிவுப்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
இதற்காக, ஜம்மு - காஷ்மீரில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்த தயார்படுத்துவதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, ஜம்முவின் தோடா, ரம்பன், கிஷ்த்வார் மாவட்டங்களில் சில அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு நேற்று சோதனை நடத்தினர். இதில், பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டியது தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில், இது போன்ற சோதனைகள் தொடரும் என என்.ஐ.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.