சவுக்கு சங்கர் மீதான 17 எப்.ஐ.ஆர்.,களில் நடவடிக்கைக்கு தடை விதித்தது கோர்ட்
சவுக்கு சங்கர் மீதான 17 எப்.ஐ.ஆர்.,களில் நடவடிக்கைக்கு தடை விதித்தது கோர்ட்
ADDED : ஆக 15, 2024 05:28 AM

புதுடில்லி : பிரபல 'யுடியூபர்' சவுக்கு சங்கர் மீதான 17 எப்.ஐ.ஆர்.,களில் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த யுடியூபர் சவுக்கு சங்கர் மீது, பெண் போலீசாருக்கு எதிராக அவதுாறாக கருத்து கூறியது, கஞ்சா வைத்திருந்தது என, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதை ரத்து செய்து, கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது. முன்னதாக கடந்த ஜூலை 18ல் சவுக்கு சங்கரை விடுவித்து, உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், அவர் மீது, மற்றொரு குண்டர் சட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இவர் மீதான 17 எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கைகளின் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அந்த எப்.ஐ.ஆர்.,கள் தொடர்பான முழு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.