அடல் பாலத்தில் இருந்து குதித்த பெண் ஹீரோ போல் காப்பாற்றிய டிரைவர்
அடல் பாலத்தில் இருந்து குதித்த பெண் ஹீரோ போல் காப்பாற்றிய டிரைவர்
ADDED : ஆக 18, 2024 12:08 AM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, டாக்சி டிரைவர் சினிமா ஹீரோ போல் பாய்ந்து பிடித்து காப்பாற்றினார்.
மும்பை நகரை நவி மும்பை உடன் இணைக்கும் வகையில் அரபிக்கடல் மீது அடல் சேது என்ற மிக நீண்ட கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டது.
80 அடி உயரம்
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இப்பாலத்தின் வழியாக டாக்சியில் பயணித்த 57 வயது பெண் ஒருவர், காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார்.
இதன்பின், பாலத்தின் பக்கவாட்டு தடுப்புக்குள் நுழைந்து கீழே குதித்தார்.
இதை கவனித்த டாக்சி டிரைவர், கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்று பெண்ணின் தலை முடியையும், கைகளையும் பிடித்துக் கொண்டார்.
ஆனாலும், அவரால் அந்த பெண்ணை மேலே இழுக்க முடியவில்லை. கொந்தளிப்பான கடலின் மேலே 80 அடி உயரத்தில், அந்தரத்தில் அந்த பெண் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த ரோந்து போலீசார், பாலத்தின் தடுப்பின் மீது ஏறி, அந்த பெண்ணை மீட்டு மேலே இழுத்து வந்தனர். அடல் பாலத்தில் இருந்து குதித்து, இதற்கு முன் சிலர் தற்கொலை செய்துள்ளனர்.
அதனால் பாலத்தின் மீது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, எந்த வாகனம் பாலத்தில் நின்றாலும், உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
எச்சரிக்கை
அப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதால் தான் சரியான நேரத்தில் போலீசார் வந்து, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றினர்.
அந்த பெண்ணை கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்த போது, சடங்கிற்காக சில புகைப்படங்களை கடலில் போட முயன்று தவறி விழுந்ததாக கூறியுள்ளார்.
பின் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்ததும், அப்பெண் எச்சரித்து அனுப்பப்பட்டார்.

