ADDED : பிப் 21, 2025 09:59 PM
விக்ரம்நகர்:புதிய அரசு பதவியேற்ற பின் டில்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை துவங்குகிறது.
சட்டசபை கூட்டத்தொடரின் நிகழ்ச்சிகள் குறித்து நேற்று முதல்வர் ரேகா குப்தாவை பா.ஜ., மூத்த எம்.எல்.ஏ., விஜேந்தர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தினார். சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது, சி.ஏ.ஜி., அறிக்கைகளை தாக்கல் செய்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள், முக்கிய இடத்தை பெறுகின்றன.
துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உரையுடன் முதல் நாள் கூட்டம் துவங்கும். அவர் நியமிக்கும் தற்காலிக சபாநாயகர், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார்.
சட்டசபையின் 2ம் நாளான 25ம் தேதி கூட்டத்தில் நிலுவையில் உள்ள 14 சி.ஏ.ஜி., அறிக்கைகளை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக விஜேந்தர் குப்தா, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வரும் 27ம் தேதி வரை சட்டசபையின் முதல் கூட்டத்தொடரை நடத்த புதிய அரசு திட்டமிட்டுள்ளது.