ADDED : ஏப் 27, 2024 11:08 PM
சாம்ராஜ் நகர்: ஓட்டுச்சாவடியை அடித்து துவம்சம் செய்த கிராமத்தை சேர்ந்த 15 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து பலரும் வெளியேறி தலைமறைவாகிவிட்டனர்; கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.
கர்நாடகாவின் 14 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. இவற்றில் சாம்ராஜ்நகர் தொகுதியும் ஒன்றாகும். ஹனுரின் மலை மஹாதேஸ்வரா மலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களின் மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்ற கோபத்தில், தேர்தலை புறக்கணித்து, ஓட்டுப் போட மாட்டோம் என அறிவித்திருந்தனர்.
இன்டிகநத்தா கிராமத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கிராமத்தினர் ஓட்டுப் போட வரவில்லை. அதிகாரிகள், கிராமத்துக்கு சென்று மக்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த கிராமத்தினர், ஓட்டுச்சாவடிக்கு சென்று மேஜை, நாற்காலிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உட்பட அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக இன்டிகநத்தா ஓட்டுச்சாவடி அதிகாரி பசவண்ணா, ஹனுார் தாசில்தார் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர். இதன்படி, 250க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இப்புகார் தொடர்பாக 15 பெண்கள், 10 ஆண்கள் என இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து இக்கிராமத்தை சேர்ந்தவர்கள், தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

