குக்கர் வெடித்து வாலிபர் பலி குண்டு வெடித்ததாக பரபரப்பு
குக்கர் வெடித்து வாலிபர் பலி குண்டு வெடித்ததாக பரபரப்பு
ADDED : ஆக 15, 2024 03:57 AM
ஜே.பி., நகர், : சமையல் செய்தபோது, குக்கர் வெடித்து தீப்பிடித்ததில் வாலிபர் இறந்தார். பயங்கர சத்தத்துடன் குக்கர் வெடித்ததால், குண்டு வெடித்து இருக்கலாம் என்று, சந்தேகம் எழுந்ததால், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோசின், 27. பெங்களூரு ஜே.பி., நகரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து, வேலை செய்கிறார்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு மோசின் வசித்த வீட்டில் குண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.
வீட்டிற்குள் இருந்து பலத்த தீக்காயத்துடன், மோசினையும், இன்னொரு வாலிபரையும் மீட்டு, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல், மோசின் இறந்து விட்டார்.
இன்னொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் யார் என்று தெரியவில்லை. மோசினின் நண்பராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டதால், வீட்டில் குண்டு வெடித்து இருக்கலாம் என்று, அக்கம்பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.
இதனால் அந்த வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.
ஆனால் சந்தேகம்படும்படியாக எந்த பொருளும் சிக்கவில்லை. குக்கர் வெடித்து பல்பில் அடித்ததால், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததுதெரிய வந்துள்ளது.