சொல்கிறார்கள்:இமயமலை போல் என்னுடைய உணவகம் வளரணும்!
சொல்கிறார்கள்:இமயமலை போல் என்னுடைய உணவகம் வளரணும்!
PUBLISHED ON : மே 02, 2026 12:00 AM

கிருஷ்ணகிரியில், ஸ்ரீ ஹிமாலயா என்ற உணவகத்தை நடத்தி வரும் சதீஷ்:
சமையல் மீதான என் ஆர்வம், என் அம்மாவிடம் இருந்து தான் வந்தது. சிறு வயதில், அம்மா சமையல் செய்யும்போது, கூடவே இருப்பேன். அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனிப்பேன். அவ்வளவு அர்ப்பணிப்புடன், அன்புடன் அம்மா உணவுகளை தயார் செய்வார்.
அவரது செய்முறைகளும், வாசமும் நம் பசியை துாண்டும். சமைத்த எல்லாவற்றையும் அங்கேயே சாப்பிட்டு விடலாம் என்று கூட தோன்ற வைக்கும். அம்மாவுடன் சேர்ந்து, நானும் சமையல் செய்ய ஆரம்பித்தேன்.
அப்போது, 'நீ பெரிய சமையல் நிபுணராக வர வேண்டும்' என்று அம்மா சொல்வார். அந்த வார்த்தைகள் தான் எனக்கு பெரிய ஊக்கமாக இருந்தன. பள்ளிப்படிப்பை முடித்த பின், 'ஹோட்டல் மேனேஜ்மென்ட்' துறை சார்ந்த படிப்பில் சேர்ந்தேன்.
உணவு தயாரிப்பது முதல், அதை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது வரை, அத்தனை விஷயங்களையும் கற்றுக் கொண்டேன். பின், ஐந்து நட்சத்திர விடுதிகளில் பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம், சமையல் துறையில் பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவின.
பல்வேறு உணவகங்களில் பணியாற்றிய அனுபவம், சொந்தமாக உணவகம் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஒரு உணவகம் துவங்க, குறைந்தபட்சம், 20 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். குறிப்பாக உள் அலங்காரம், சமையல் உபகரணங்கள், முன்பணம், மாத வாடகை போன்ற செலவுகள் தான் அதிகம் இருக்கும்.
என் உணவகத்திற்கு, ஸ்ரீ ஹிமாலயா என்று பெயர் வைத்தேன். இமயமலை என்பது உயரத்தையும், உச்சியையும் குறிக்கிறது. நம்முடைய தொழிலும், அந்த உயரத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தால், அந்த பெயரை வைத்தேன். ஆரம்பத்தில் உணவக தொழிலில் பணியாளர் பற்றாக்குறை பெரிய சவாலாக இருக்கும். சில நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது முதல், பில் போடுவது வரை அனைத்தையும் நாமே செய்ய வேண்டி இருக்கும்.
ஒரு சமையல் நிபுணருக்கு சமையல் மட்டும் தெரிந்திருந்தால் போதாது; உணவகத்தில் நடக்கும் ஒவ்வொரு பணியும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு, பல உணவகங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்கு கைகொடுத்தது.
மேலும், இந்த தொழிலில் கடினமாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டாலும், பொறுமையுடன் தொடர்ந்து முயன்றால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இப்போது, என் உணவக தொழில் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. மாதம், 6.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. பெரிய நகரங்களிலும் கிளைகளை துவங்க வேண்டும் என்பது என் கனவு.
