அத்துமீறி நுழைந்த 'ட்ரோன்'கள்: ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு
அத்துமீறி நுழைந்த 'ட்ரோன்'கள்: ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு
ADDED : ஏப் 01, 2024 11:24 PM

ரஜோரி: பாகிஸ்தானில் இருந்து, நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு 'ட்ரோன்'கள் எனப்படும் ஆளில்லா விமானங்களின் மீது, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நம் எல்லை பகுதிக்குள், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பினர், சமீபகாலமாக ட்ரோன் வாயிலாக கண்காணித்து ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க, நம் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நேற்று ட்ரோன் பறந்ததை, நம் பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அதை நோக்கி, ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே, அந்த ட்ரோன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்தது.
இச்சம்பவம் அரங்கேறிய சில நிமிடங்களில், கேரி பகுதியில் மற்றொரு ட்ரோன் பறந்ததை பார்த்து, பாதுகாப்பு படையினர் சுட்டனர். அந்த ட்ரோனும், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது. இதையடுத்து, நம் எல்லை பகுதிக்குள் ஏதேனும் ஊடுருவல் சம்பவம் அரங்கேறி உள்ளதா என்பது தொடர்பாக, ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

