ADDED : ஜூன் 14, 2024 07:38 AM
பெங்களூரு: கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் தர்ஷனை காப்பாற்ற முயற்சிக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
பெங்களூரு, சுமனஹள்ளியின் காமாட்சிபாளையா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கால்வாயில், சில நாட்களுக்கு முன், ஒரு ஆணின் உடல் கிடந்தது. விசாரணையில், கொலையாகி கிடந்தவரின் பெயர் ரேணுகாசாமி, 33, சித்ரதுர்காவை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தன் தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷன், கூலிப்படையை ஏவி, ரேணுகாசாமியை கொலை செய்தது தெரிந்தது.
கொலை தொடர்பாக தர்ஷன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை கடுமையாக தண்டிக்கும்படி, பலரும் அரசை வலியுறுத்துகின்றனர்.
கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், அரசியல்வாதிகள் பலருக்கு மிகவும் நெருக்கமானவர். அனைத்து கட்சிகளிலும் இவருக்கு ரசிகர்கள், நண்பர்கள் உள்ளனர்.
தற்போது சிறையில் உள்ள தர்ஷனை காப்பாற்றும்படி, முதல்வர், துணை முதல்வரிடம் சிலர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஆளுங்கட்சியின் சில அமைச்சர்கள், அனைத்து கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சில திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் முயற்சிக்கின்றனர்.
விசாரணை அதிகாரிகள், டாக்டர்களுக்கு போன் செய்து, நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'நடிகர் தர்ஷன் வழக்கு தொடர்பாக, வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. விசாரணை அதிகாரிகளுக்கு தேவையின்றி நெருக்கடி கொடுக்க கூடாது' என, அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்களுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுஉள்ளார்.
'கொலை வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். உண்மை வெளிச்சத்துக்கு வரட்டும். இந்த விஷயத்தில் யாரும் தலையிட கூடாது. கொலை வழக்கில் சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
'உப்பு தின்றவர், தண்ணீர் குடிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். தவறு செய்யாதோர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
'இந்த விஷயத்தில் செல்வாக்கை காண்பிப்பது, போலீசாருக்கு நெருக்கடி கொடுப்பது சரியல்ல. யாராவது நெருக்கடி கொடுப்பதாக தெரிந்தால், பொறுத்து கொள்ள மாட்டேன்' என எச்சரித்து உள்ளார்.