வேலையில் மேலாளர் 'டார்ச்சர்' ஆள் வைத்து அடித்த இருவர் கைது
வேலையில் மேலாளர் 'டார்ச்சர்' ஆள் வைத்து அடித்த இருவர் கைது
ADDED : ஏப் 05, 2024 11:09 PM
ஹென்னுார்: வேலையில் 'டார்ச்சர்' கொடுத்த மேலாளரை, கூலிப்படை ஏவி தாக்கிய, இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, ஹென்னுாரில் பால் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு மேலாளராக வேலை செய்பவர் சுரேஷ், 38. கடந்த 31ம் தேதி ஹொரமாவில் இருந்து, ஹென்னுாருக்கு பைக்கில் வந்தார். பைக்கை மறித்த மூன்று நபர்கள், சுரேஷிடம் தகராறு செய்தனர்.
பைக்கில் இருந்து கீழே தள்ளி, அவரை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பினர். படுகாயம் அடைந்த சுரேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அளித்த புகாரில் ஹென்னுார் போலீசார் விசாரித்தனர்.
சுரேஷை, மூன்று பேர் தாக்குவது அந்த வழியாக சென்ற காரின் முன்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த, கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கூலிப்படையை சேர்ந்த, அனிஷ், முத்து, சந்தீப் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. சுரேஷ் வேலை செய்யும் நிறுவனத்தில், உமாசங்கர், வினிஷ் ஆகிய இருவர், ஊழியர்களாக வேலை செய்கின்றனர். அவர்கள் இருவருக்கும், சுரேஷ் வேலையில், 'டார்ச்சர்' கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தில் கூலிப்படை ஏவி, சுரேஷை தாக்கியது தெரிந்தது. இதையடுத்து உமாசங்கர், வினிஷ் கைது செய்யப்பட்டனர்.

