துப்பாக்கிச்சூடு காட்சி வெளியீடு இரண்டு போலீசார் சஸ்பெண்ட்
துப்பாக்கிச்சூடு காட்சி வெளியீடு இரண்டு போலீசார் சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 27, 2024 01:44 AM
சுபாஷ் நகர்: மேற்கு டில்லியின் பர்கர் கிங் என்ற உணவுக் கடைக்குள் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகளை பகிர்ந்ததற்காக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேற்கு டில்லியில் உள்ளது பர்கர் கிங் என்ற ரெஸ்டாரன்ட். இங்கு கடந்த 18ம் தேதி ஒரு பெண்ணுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அமன் ஜூன், 26, என்பவர் இரண்டு கும்பலால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அமன் ஜூன் உடலில் 38 குண்டுகள் துளைத்திருந்தன. இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், ரெஸ்டாரன்ட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள், 20ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகின.
எந்தவொரு குற்றச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளையும் பொதுவெளியில் கசிய விடக்கூடாது என, அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதை மீறி, துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 14 வினாடி சிசிடிவி காட்சிகள் வெளியானது குறித்து விசாரணை நடத்தும்படி கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இதில் சுபாஷ் நகர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய இருவரும் வீடியோ காட்சிகளை கசியவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து, டில்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.