செய்யாத கொலைக்கு சிறை சென்ற இருவர் 17 ஆண்டுக்கு பின் விடுவிப்பு
செய்யாத கொலைக்கு சிறை சென்ற இருவர் 17 ஆண்டுக்கு பின் விடுவிப்பு
ADDED : ஆக 08, 2026 09:13 PM

போபால்: மத்திய பிரதேசத்தில், 2009ல் நடந்த கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இரு சகோதரர்கள் மீதான விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்த உயர் நீதிமன்றம், அவர்களை 17 ஆண்டுகளுக்குபின் விடுவித்தது.
ம.பி.,யின் தமோ மாவட்டத்தில், கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் பியாரேலால் கடாரியா என்பவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் துளசிராம் மற்றும் ஹர்பிரசாத் ஆகிய இரு சகோதரர்களை சந்தேக நபர்களாக போலீசார் கைது செய்தனர்.
இவர்களுக்கு கடந்த, 2012ல் தமோ அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ம.பி., உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, அரசு தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள், சாட்சியங்களில் தீவிர குறைபாடுகள் இருப்பதை நீதிபதிகள் கண்டறிந்தனர். கொலையான பியாரேலால் குடும்பத்தினர் அளித்த சாட்சியங்களிலும் முரண்பட்ட தகவல்கள் இருந்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதுதவிர, பியாரேலாலை கொல்ல பயன்படுத்திய கத்தி எனக்கூறி நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்த ஆயுதத்தில், ரத்தக் கறை எதுவும் இல்லை என தடயவியல் ஆய்வில் தெரியவந்ததையும் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இரு சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, செய்யாத குற்றத்துக்காக, 17 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த துளசிராம், ஹர்பிரசாத் ராஜ்பால் ஆகியோர், சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக உள்ளனர்.
