நம் ராணுவ ரகசியங்களை திருட பாக்., உளவுத்துறை... சதி வலை!
நம் ராணுவ ரகசியங்களை திருட பாக்., உளவுத்துறை... சதி வலை!
UPDATED : ஆக 08, 2026 10:53 PM
ADDED : ஆக 08, 2026 09:13 PM
புதுடில்லி:பாகிஸ்தான் விரித்த, 'ஹனி டிராப்' எனப்படும், காதல் வலை மோசடியில் சிக்கி, நம் நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்ட நம் விமானப் படை அதிகாரி கைது செய்யப்பட்டார். 'மொபைல் போன்' செயலி வழியாக, விமானப் படை நடவடிக்கைகளை நோட்டமிட்டது குறித்து டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம் விமான படையில் விங் கமாண்டராக பணிபுரிந்த 44 வயது நபரை, சமூக வலைதளம் வாயிலாக பெண் ஒருவர் கடந்த ஏப்ரலில் தொடர்பு கொண்டார். முதலில் நண்பராக அறிமுகமான பெண், பின் அந்த அதிகாரியிடம் நெருக்கமாக பழகினார். இருவரும், 'வாட்ஸாப்' தகவல் பரிமாற்ற செயலி வாயிலாக பேசி பழகி வந்தனர். அந்த பெண் கேட்டதை அடுத்து விமானப் படை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விங் கமாண்டர் அனுப்பியதாக கூறப்படுகிறது.
ராணுவம் சார்ந்த முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் அந்த பெண்ணுக்கு அவர் அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் விங் கமாண்டரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, விமானப் படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராணுவ ரகசியங்களை அவர் கசியவிட்டது தெரியவந்ததை அடுத்து, டில்லி போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து, விங் கமாண்டரை டில்லி போலீசார் கடந்த மே 30ல் கைது செய்தனர். அவர் மீது 'அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம்' கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், கடந்த மாதம் 7ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்தே, இந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இது குறித்து டில்லி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
விமானப் படையின் விங் கமாண்டர் ஒருவரை சமூக வலைதளம் வாயிலாக தொடர்பு கொண்ட பெண் ஒருவர், அவரை 'ஹனி டிராப்' வலையில் வீழ்த்தியுள்ளார். காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியும், ராணுவம் தொடர்பான தகவல்களை விங் கமாண்டரிடம் இருந்து அப்பெண் பெற்றுள்ளார். பாக்., உளவுதுறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த பெண், அந்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
விங் கமாண்டரின் மொபைல் போனை ஆய்வு செய்ததில் இது உறுதியாகியுள்ளது. அந்த பெண்ணின் அறிவுறுத்தலின் பேரில், தன்னுடன் பணியாற்றும் மற்றொரு அதிகாரியின் மொபைல் போனில் ரகசிய செயலி ஒன்றையும் விங் கமாண்டர் நிறுவியுள்ளார்.
அந்த செயலி, போனில் தரவுகளை திருடவும், இருப்பிடத்தை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படும், 'ஸ்பைவேர்' ஆக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதன் வாயிலாக, பல ராணுவ ரகசியங்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இருப்பினும், கைதான விங் கமாண்டர் குறித்த விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. அதேசமயம், அந்த பெண் குறித்தும், அவருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் குறித்தும் எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
