ADDED : ஜூலை 03, 2024 10:19 PM

பாகல்குண்டே: திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால், 'ஜிம்'மில் பணியாற்றிய பெண் வரவேற்பாளர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாவணகெரே டவுனை சேர்ந்தவர் மல்லன கவுடா. இவரது மனைவி ஜோதி.
இந்த தம்பதியின் மகள் ஷ்ரவாணி, 22. பெங்களூரு தாசரஹள்ளியில் தங்கிருந்து, பாகல்குண்டேயில் உள்ள ஜிம்மில், வரவேற்பாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு சென்று இருந்தார். அப்போது ஷ்ரவாணியிடம் திருமணம் செய்வது குறித்து அவரது பெற்றோர் பேசியுள்ளனர். 'எனக்கு தற்போது திருமணம் செய்ய விருப்பம் இல்லை' என, பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு, பெங்களூரு வந்துவிட்டார்.
நேற்று முன்தினம் மதியம் ஜிம்மின் வரவேற்பு அறையில் வைத்து, விஷம் குடித்தார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்த அவரை, ஜிம் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முன்தினம் இரவு இறந்தார். பாகல்குண்டே போலீசார் விசாரிக்கின்றனர்.