காலியாகும் பி.ஆர்.எஸ்., கூடாரம் காங்.,கிற்கு தாவிய எம்.எல்.சி.,க்கள்
காலியாகும் பி.ஆர்.எஸ்., கூடாரம் காங்.,கிற்கு தாவிய எம்.எல்.சி.,க்கள்
ADDED : ஜூலை 06, 2024 02:11 AM

ஹைதராபாத், தெலுங்கானாவில், பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.சி.,க்கள், ஆளும் காங்கிரசில், முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இணைந்தனர்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
தொடர்கதை
இங்கு கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில், காங்., 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
ஆளுங்கட்சியாக இருந்த சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி, 39 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. செகந்திராபாதில் வெற்றி பெற்ற பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ., லாஸ்யா நந்திதா, இந்தாண்டு துவக்கத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் காங்., வெற்றி பெற்றது. தெலுங்கானா சட்டசபையில், காங்., பலம், 65 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைந்து வரும் நிகழ்வு தொடர்கதையாக நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தலில், பி.ஆர்.எஸ்., தோல்வி அடைந்ததில் இருந்து இதுவரை ஆறு எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைந்துள்ளனர்.
மேலும், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் காங்கிரசில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா சட்டமேலவையில், பி.ஆர்.எஸ்., - எம்.எல்.சி.,க்களான தண்டே விதல், பானு பிரசாத் ராவ், எம்.எஸ்.பிரபாகர், பொக்ரபு தயானந்த், யெக்கே மல்லேசம், பஸ்வராஜு சாரையா ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் நேற்று இணைந்தனர். மொத்தம் 40 எம்.எல்.சி.,க்கள் உள்ள தெலுங்கானா சட்டமேலவையில், பி.ஆர்.எஸ்., கட்சிக்கு, 25 எம்.எல்.சி.,க்களும்; காங்கிரசுக்கு நான்கு எம்.எல்.சி.,க்களும் இருந்தனர்.
கலக்கம்
தற்போது பி.ஆர்.எஸ்., - எம்.எல்.சி.,க்கள் ஆறு பேர், கட்சி தாவி உள்ளதால், அதன் பலம், 19 ஆக குறைந்துள்ளது.
தெலுங்கானாவில், பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ.,க்கள், எல்.சி.ஏ.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், காங்கிரசில் இணைந்து வருவதால், அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் கலக்கம் அடைந்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், காங்., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தேர்தலில் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., வெற்றி பெற்ற பின், வேறொரு கட்சியில் இணைந்தால், அவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்யும் வகையில், அரசியலமைப்பின் 10வது அட்டணையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
இதை குறிப்பிட்டு, பி.ஆர்.எஸ்., மூத்த தலைவர் ராமா ராவ், சமூக வலைதளத்தில் கூறியதாவது:
பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். இவர்களை ராஜினாமா செய்ய வைக்க ராகுலால் முடியவில்லை என்றால், தேர்தல் அறிக்கையில் கூறியதை எப்படி நிறைவேற்றுவார்? இந்த தேசமும் அவரை எப்படி நம்பும்?
இவ்வாறு அவர் கூறினார்.