ADDED : ஜூலை 14, 2024 12:07 AM

பணஜி: ''தாங்கள் செய்த தவறுகளால்தான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது. நாமும் அதுபோன்ற தவறை செய்யக்கூடாது,'' என, கட்சியினருக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் ஆதரவு
பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, கட்சியின் கோவா பிரிவு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, நம் கட்சி ஒரு வித்தியாசமான கட்சி என்று கூறுவார்.
அதை கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற கட்சிகளிடம் இருந்து வித்தியாசமாக உள்ளதால்தான், மக்கள் நமக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து தவறுகள் செய்ததால்தான், காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.
நாமும் அதுபோன்று தவறு செய்தால், அந்தக் கட்சி வெளியேறி, நாம் ஆட்சிக்கு வந்ததற்கு எந்த பலனும் இருக்காது.
நம் கட்சி எந்த வகையில் வித்தியாசமானது என்பதை நிர்வாகிகள், தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊழலில்லாத நாட்டை உருவாக்க முயன்று வருகிறோம். பொருளாதார சீர்திருத்தங்களில் அரசியலும் ஒரு முக்கியமான கருவி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கான வழிகளை நாம் உருவாக்க வேண்டும்.
அரசியல்
மஹாராஷ்டிராவில் ஜாதி அடிப்படையிலான அரசியல் தீவிரமாக இருந்தது. அந்த பாதையை நாங்கள் ஏற்கவில்லை. ஜாதியின் அடிப்படையில் அரசியல் செய்தால் துாக்கி எறியப்படுவீர்கள்.
ஒருவரின் தனிப்பட்ட மதிப்பின் அடிப்படையிலேயே அவரை மக்கள் அடையாளம் காண வேண்டும், ஜாதியின் அடிப்படையில் அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.