பயங்கரவாதிகளை பழி வாங்குவோம் ராணுவ அமைச்சக செயலர் ஆவேசம்
பயங்கரவாதிகளை பழி வாங்குவோம் ராணுவ அமைச்சக செயலர் ஆவேசம்
ADDED : ஜூலை 10, 2024 01:26 AM

ஜம்மு, ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், நம் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
'ராணுவ வீரர்களின் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை பழிக்கு பழி வாங்குவோம்' என, ராணுவ அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்செடி என்ற பகுதியில், நேற்று முன்தினம் நம் ராணுவ வீரர்கள் சென்ற ரோந்து வாகனம் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில், ஐந்து ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்கள் ஐந்து பேரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், நம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க, ராணுவ வீரர்கள், ஜம்மு - காஷ்மீர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து, நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கதுவா மாவட்டத்தின் மச்செடி, பட்நோட், கிண்ட்லி, லோஹாய் மல்ஹர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மேலும், அடர்ந்த வனப்பகுதிக்குள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாகவும் தேடுதல் வேட்டையில் அவர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே, 'ராணுவ வீரர்களின் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை சும்மா விட மாட்டோம்.
'இதற்கு பழிக்கு பழி வாங்குவோம். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீய சக்திகளை வீழ்த்துவோம்' என, ராணுவ செயலர் கிரிதர் அரமனே தெரிவித்தார்.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், “வீரர்கள் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும்,” என, தெரிவித்துள்ளார்.