உடல் உறுப்புகளை கடத்தி ஈரானில் விற்ற கேரள கும்பல் 'கிரிப்டோ'வில் முதலீடு என்.ஐ.ஏ., விசாரணையில் 'திடுக்' தகவல்
உடல் உறுப்புகளை கடத்தி ஈரானில் விற்ற கேரள கும்பல் 'கிரிப்டோ'வில் முதலீடு என்.ஐ.ஏ., விசாரணையில் 'திடுக்' தகவல்
ADDED : நவ 23, 2025 02:40 AM

கொச்சி: இந்தியர்களை ஈரானுக்கு அழைத்துச்சென்று உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக கடத்தி விற்பனையில் ஈடுபட்ட கும்பல், கேரளாவில் மருத்துவ கிளப் மூலம், 'கிரிப்டோ'வில் முதலீடு செய்ததுடன், ஏராளமான சொத்துக்களையும் வாங்கி குவித்தது, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணை மேற்காசிய நாடுகளான ஈரான், குவைத்துக்கு ஆட்களை அழைத்துச் சென்று மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்வதாக, போலீசாருக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது. இதன்படி விசாரணை நடத்திய போலீசார், கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த சபீத் நாசர், 31, என்பவரை கொச்சி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு மே 19ல் கைது செய்தனர்.
அ வரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2018 முதல் சர்வதேச உடல் உறுப்பு மாபியா கும்பலுடன் இணைந்து மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதவிர, இக்கடத்தலில் கேரளாவைச் சேர்ந்த மது ஜெயக்குமாருக்கு முக்கிய ப ங்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
விசாரணையில், மது ஜெயக்குமார் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் இருந்தபடி, அங்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் இந்தியர்களின் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.
மிரட்டல் இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த சஜித், ஆந்திராவைச் சேர்ந்த ராம் பிரசாத் ஆகியோரும், உடல் உறுப்பு கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இக்கடத்தல் கும்பலின் முக்கிய நபராக கருதப்படும் மது ஜெயக்குமாரை பிடிக்கவும் என்.ஐ.ஏ., தீவிரம் காட்டியது. இந்நிலையில் ஈரானில் தங்கியிருந்த ஜெயக்குமார், கடந்த 7ம் தேதி இந்தியா வந்தபோது கொச்சி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், கேரளா மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஈரானுக்கு அழைத்துச் சென்று ஆபத்தான சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளை அக்கும்பல் கடத்தியது தெரியவந்தது.
அதன்பின் அவர்களை மிரட்டி, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை விற்பனை செய்துள்ளனர். உறுப்பு ஒன்றிற்கு, 50 லட்சம் ரூபாய் வரை இக்கும்பல் பெற்றது தெரியவந்து உள்ளது.
இதற்காக, கேரளாவின் கொச்சியில், 'ஸ்டெம்மா' என்ற மருத்துவ கிளப் ஒன்றை மது ஜெயக்குமார் நடத்தி வந்ததும் தெரியவந்தது. உடல் உறுப்புகள் கடத்தல் மூலம் கிடைக்கும் தொகையை, இந்த கிளப் பெயரில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர, கைதான நபர்களின் பெயரில் 'கிரிப்டோ' எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்ததுடன், ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

