ADDED : ஆக 03, 2024 12:47 AM
இயற்கை பேரிடர்களால் அதிகளவு பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக ஹிமாச்சல பிரதேசம் உள்ளது.
இயற்கைக்கு முரணான வகையில் ஹிமாச்சலில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதுடன், காடுகள் அழிப்பு, முறையான வடிகால்கள் இல்லாமல் தண்ணீரை தேக்குவது போன்றவற்றால் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, சுற்றுச்சூழல் மாசு ஏற்படவும் காரணமாக அமைகிறது. இதன் வாயிலாக, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஹிமாச்சல பிரதேச மாநிலம் இலக்காகி வருகிறது. குறிப்பாக, ஹிமாச்சலில் உள்ள 12 மாவட்டங்களிலும் அதிகளவு நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கு சமீப ஆண்டுகளாக இந்த மாநிலத்தில், அடிக்கடி மேக வெடிப்பு காரணமாக குறைவான நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் அதீத கனமழை கொட்டி வருகிறது. இதனால், கனமழை பெய்து, ஆற்றின் நீர்மட்டம் உயர்வதுடன், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது.