ஸ்ரீராமுலுவை ஆதரித்து பல்லாரியில் யதுவீர் பிரசாரம்
ஸ்ரீராமுலுவை ஆதரித்து பல்லாரியில் யதுவீர் பிரசாரம்
ADDED : மே 04, 2024 11:03 PM

பல்லாரி: பல்லாரியில் தலித் சமுதாய பெண்ணின் வீட்டில் மைசூரு மன்னர் குடும்பத்தின் யதுவீர் இளநீர் குடித்ததால், அக்குடும்பத்தினர் பூரிப்படைந்துள்ளனர்.
பல்லாரி பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து, நேற்று மன்னர் குடும்பத்தின் யதுவீர் பிரசாரம் செய்தார். நகரின் ஜெயின் மார்க்கெட்டில் ராஜ்ஸ்தானி சமூக தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
கோனாலு வார்டுக்குச் சென்ற அவர், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்தார். அங்குள்ள தலித் சமுதாயத்தை சேர்ந்த துர்கம்மா என்பவரின் வீட்டுக்குச் சென்றார்.
அவருக்கு சால்வை அணித்து, அம்பேத்கர் படம் வழங்கினர். அதை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட இளநீரை குடித்தார்.
பின், யதுவீர் அளித்த பேட்டி:
ஹம்பி விருபாக் ஷாவை தரிசனம் செய்ய, எனது பள்ளி நாட்களில் கூட வந்துள்ளேன். இன்று ஸ்ரீராமுலுவுக்காக பிரசாரம் செய்ய வந்துள்ளேன்.
கோனாலு வார்டில் உள்ள தலித் சமுதாயத்தினர் வீட்டில், அவர்கள் கொடுத்த இளநீரை குடித்தேன். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளேன்.
அரசியலமைப்பு சட்டத்துக்கும், அம்பேத்கருக்கும், கர்நாடகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது மைசூரின் பிரதிநிதித்துவ அமைப்பு மற்றும் மில்லர் அறிக்கையை அம்பேத்கர் குறிப்பிட்டார்.
மன்னர் காலத்தில் மைசூரில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அனைத்து வகுப்பினரும் ஒன்று சேர்ந்துள்ளோம். இனி கன்னடர்களாக, இந்தியர்களாக நாம் அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மைசூரு அரச குடும்பத்தினர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் வீட்டுக்கு அவர் வருவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். 'இந்தாண்டு நடக்கும் மைசூரு தசரா விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படும்' என யதுவீர் கூறினார்.
- துர்கம்மா