ADDED : ஆக 17, 2024 11:12 PM

தானத்தில் மிகவும் சிறந்தது ரத்த தானம். ஒரு உயிரை காப்பாற்ற மிகவும் தேவைப்படுவது ரத்தம். ரத்த வங்கிகளில் தானமாக கொடுக்கப்படும் ரத்தம் சேகரித்து வைக்கப்படும்.
பின், தேவைப்படுபவர்களுக்கு அங்கிருந்து ரத்தம் அனுப்பி வைக்கப்படும். ஆனால் சில ஆண்டுகளாக ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சினேகா மைத்திரி
முக்கிய இடங்களில் ரத்த தானம் கொடுப்பதற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தாலும், அவற்றை கடந்து, கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.
இந்நிலையில் போலீஸ்காரர் ஒருவர் ரத்த தானம் செய்யும்படி வாலிபர்களை ஊக்குவித்து வருகிறார். அவரை பற்றி பார்க்கலாம்.
ஹாவேரியின் அக்கி ஆலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கரபசப்பா, 40. ஹனகல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார்.
இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சினேகா மைத்திரி என்ற குழுவை ஆரம்பித்து, ரத்த தானம் செய்து வருகிறார்.
இதுகுறித்து கரபசப்பா கூறுகையில்:
மனிதனின் உயிர்நாடியாக விளங்குவது ரத்தம் தான். விபத்தில் சிக்கி உயிர் இழப்பவர்கள் பெரும்பாலும், ரத்தம் கிடைக்காமல் கிடக்கின்றனர்.
தகராறு ஏற்பட்டு தாக்குதலில் காயம் அடைந்து போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க ரத்த வெள்ளமாக வருவர்.
இதை பார்க்க பரிதாபமாக இருக்கும். ரத்தத்தை வீணாக சிந்தக்கூடாது என்று முடிவு செய்தேன்.
4,000 பேர்
எனது நண்பர்கள், தெரிந்தவர்களுடன் சேர்ந்து சினேகா மைத்திரி என்ற குழுவை ஆரம்பித்தோம்.
இதுவரை எங்கள் குழுவின் சார்பில் பல்வேறு ரத்த தான முகாம்கள் நடத்தியுள்ளோம். 4,000 பேரிடம் ரத்தத்தைத் தானமாக பெற்றுள்ளோம். ரத்தத்தைத் தானமாக கொடுக்கும்படி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். என்னிடம் ரத்த தானம் கொடுப்பவர்களின் 800 பேரின் மொபைல் நம்பர் உள்ளது.
யாருக்காவது அவசரமாக ரத்தம் தேவைப்பட்டால் அவர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவிப்பேன். ரத்தம் கிடைக்காமல் ஒரு உயிர் இழக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்-நமது நிருபர்-.

