ADDED : ஜூன் 23, 2024 06:19 AM
தாவணகெரே: பலாத்கார முயற்சியில் புதுப்பெண்ணை கத்தியால் குத்திய, பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாவணகெரே ஜகளூர் சிக்கமனஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இவருக்கு திருமணம் நடந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கட்டப்பா, 30, என்பவர், இளம்பெண் வீட்டிற்குள அத்துமீறி புகுந்து, அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். கோபமடைந்த கட்டப்பா, இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றார். ஆனால் அவரை, அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். 'தர்ம அடி' கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.
கத்திக்குத்து காயமடைந்த இளம்பெண், தாவணகெரே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையில் திருமணத்திற்கு முன்பும், இளம்பெண்ணை கட்டப்பா இரண்டு முறை பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.