ADDED : செப் 18, 2024 01:10 AM
மலப்புரம், கேரளாவில், குரங்கம்மை தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஆப்ரிக்க நாடுகளில், 'எம் - பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் அந்த தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை இதன் அறிகுறிகள்.
நம் அண்டை நாடுகளான பாக்., மற்றும் வங்கதேசத்தில் குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
சர்வதேச பயணியர் உட்பட வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
ஹரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு, கடந்த வாரம் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர், டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து கேரளாவின் மலப்புரத்துக்கு சமீபத்தில் வந்த இளைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர், குரங்கம்மை தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மலப்புரத்தில், 'நிபா' வைரஸ் தொற்றால் 24 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது, குரங்கம்மை தொற்று அறிகுறிகளுடன், மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளது, அம்மாவட்ட மக்களை பீதியடையச் செய்துள்ளது.
இதையடுத்து முககவசம் அணிவது உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 225 பேரில், நெருங்கிய தொடர்பில் இருந்த 13 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 'நெகட்டிவ்' என்பது உறுதி செய்யப்பட்டது.