ADDED : ஜூலை 04, 2024 01:24 AM
புதுடில்லி, மஹாராஷ்டிராவில் 'ஜிகா' வைரஸ் பரவி வரும் நிலையில், கர்ப்பிணியரை பரிசோதிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்களை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசு வாயிலாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது. மஹாராஷ்டிராவில் இரண்டு கர்ப்பிணியர் உட்பட, ஏழு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படும் கர்ப்பிணியரின் கருவில் உள்ள குழந்தைக்கு, 'மைக்ரோசெபாலி' எனப்படும், தலை மிகவும் சிறிதாக இருக்கும் நிலை மற்றும் நரம்பியல் கோளாறுகள் உருவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் கண்காணிப்பு அளிக்க, மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி, ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனே அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.