'குர்குரே' பாக்கெட்டால் கலவரம் 10 பேர் காயம்; 25 பேர் ஓட்டம்
'குர்குரே' பாக்கெட்டால் கலவரம் 10 பேர் காயம்; 25 பேர் ஓட்டம்
ADDED : டிச 24, 2024 06:38 AM

தாவணகெரே: குர்குரே பாக்கெட் விஷயமாக, இரண்டு தரப்பினர் இடையே அடிதடி ஏற்பட்டதில், 10 பேர் காயம் அடைந்தனர். கைது பீதியால் 25 பேர் கிராமத்தை விட்டே ஓட்டம் பிடித்தனர்.
தாவணகெரே, சென்னகிரியின் ஹொன்னபாவி கிராமத்தில் வசிக்கும் அதீப் உல்லா, மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சதாம், சாலையோர ஹோட்டல் நடத்துகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சதாமின் குழந்தைகள், அதீப் உல்லாவின் கடைக்கு சென்று 20 ரூபாய் கொடுத்து இரண்டு குர்குரே சிப்ஸ் பாக்கெட் வாங்கினர். ஆனால், அவை காலாவதி ஆகியிருந்தன. எனவே வேறு பாக்கெட் தரும்படி சதாம் கேட்டுள்ளார்.
இதற்கு அதீப் உல்லா மறுத்ததால், இரண்டு குடும்பத்தினர் இடையே, வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கிராமத்தினர் சமாதானம் செய்தனர்.
காலாவதியான பொருட்களை விற்பதாக, அதீப் உல்லா மீது சென்னகிரி போலீஸ் நிலையத்தில், சதாம் புகார் அளித்தார்.
கோபமடைந்த அதீப் உல்லா, 30க்கும் மேற்பட்டோருடன் நேற்று காலை சதாமின் ஹோட்டலுக்கு வந்து, அவரை தாக்கினார். ஹோட்டலையும் அடித்து நொறுக்கினார்.
சண்டையை தடுக்க வந்தவர்களையும் தாக்கியதால், கலவரம் ஏற்பட்டு பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இதில் 10 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார், சூழ்நிலையை சரி செய்தனர். கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்தும் வழக்குப் பதிவாகியுள்ளது. இதற்கிடையே கைது பயத்தால் 25 பேர் கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்து விட்டனர்.