இந்திய அணி அபார பந்துவீச்சு… வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
இந்திய அணி அபார பந்துவீச்சு… வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
UPDATED : அக் 02, 2025 11:09 AM
ADDED : அக் 02, 2025 09:19 AM

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர்.
அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு, இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக, சிராஜூம், பும்ராவும் வேகத்தில் மிரட்டினர். இதனால், அந்த அணி 42 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேம்ப்பெல் (8) விக்கெட் பும்ராவும், டேக்நரைன் சந்திரபால் (0), அதனஷே (12), கிங் (13) ஆகியோரின் விக்கெட்டுகளை சிராஜூம் வீழ்த்தினர்.
தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோகித் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வை அறிவித்து விட்டதால், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்கள் இல்லாமல் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதல்முறையாக களம் இறங்குகிறது.