ADDED : பிப் 21, 2024 08:41 AM
பெங்களூரு, : விசாரணை நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்த நிலையில், சிறுமியை கற்பழித்த பெயின்டருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மைசூரு, வி.வி., புரத்தில் வசிக்கும், தம்பதிக்கு 25 வயது மகள் உள்ளார். 2013ல் 14 வயதாக இருந்தபோது, சிறுமி வீட்டின் அருகே வசித்த 45 வயது பெயின்டர், அவரை ஹுன்சூர், பிரியப்பட்டணாவுக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், பெயின்டர் கைது செய்யப்பட்டார்.
மைசூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கிற்குத் தேவையான சாட்சிகளை, போலீசார் சமர்ப்பிக்க தவறியதாக கூறி, பெயின்டரை, நீதிமன்றம் 2016ல் விடுவித்தது.
இதை எதிர்த்து, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் பிரபாகர், உமேஷ் அடிகா விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், ''சிறுமியின் சம்மதத்தின்பேரில், எனது மனுதாரர் உறவு கொண்டார்,'' என்றார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'இளம்பெண்ணின் அப்போதைய வயதை சுட்டிக்காட்டி, உறவுக்கு சம்மதித்தார் என்பதை ஏற்க முடியாது' என்று கூறினர்.
மேலும் பெயின்டருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அடுத்த 45 நாட்களுக்குள் அவர் சரணடையும்படி உத்தரவு பிறப்பித்தனர்.

