ADDED : ஆக 03, 2024 04:50 PM

பெங்களூரு: 'நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டி தருவோம்' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல் கூறிய பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டி தரப்படும் என உறுதியளித்தார். தற்போது, வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் கர்நாடகா அரசு சார்பில் கட்டி தரப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகா சார்பில்
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில், '' கர்நாடகா கேரளாவுக்கு ஆதரவாக நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா அரசு சார்பில், 100 வீடுகள் கட்டித் தருவோம். ஒன்றாக இணைந்து செயல்பட்டு இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்போம்'' என பதிவிட்டுள்ளார். சித்தராமையாவின் முடிவிற்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல், பிரியங்கா நன்றி தெரிவித்தனர்.
ராகுல் பாராட்டு
'' வயநாட்டின் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையில், தாராளமாக ஆதரவளித்த கர்நாடக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதற்கான உங்கள் அர்ப்பணிப்பு வரவேற்கதக்கது. இந்தியர்களின் கருணையும் ஒற்றுமையும் தான் வயநாட்டுக்கு இப்போது தேவைப்படும் பலம்'' என ராகுல் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.