உறுப்பினர்கள் எதிர்ப்பு
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் வழக்கமாக, காலை 10:30 மணி அல்லது 11:00 மணிக்கு துவங்குவது வழக்கம். ஆனால், நேற்று காலை 9:30 மணிக்கு துவங்குவதாக அறிவித்து, 9:35 மணிக்கு துவங்கியது. இதற்கு, பல உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 10:30 மணிக்கு பின், நேரத்தை மாற்றும்படி வலியுறுத்தினர். ஆனால், இன்று காலை 9:45 மணிக்கு துவங்குவதாக சபாநாயகர் காதர் அறிவித்துள்ளார். நேற்று விரைவில் துவங்கியதால், 100க்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன.
51.12 லட்சம் ஏக்கர் நாசம்
ம.ஜ.த., - எம்.எல்.சி., ஷ்ரவணாவின் கேள்விக்கு, விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி பதிலளித்து பேசுகையில், ''மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், 51.12 லட்சம் ஏக்கர் தோட்டக்கலை விவசாயம் நாசமாகியுள்ளது. நஷ்டம் ஏற்பட்ட விவசாயிகளின் ஒவ்வொருவருக்கும், தலா 2,000 ரூபாய் வீதம், 30.24 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது,'' என்றார்.
7 லட்சம் தகுதியற்றவர்கள்
பா.ஜ., - எம்.எல்.ஏ., சித்து சவதியின் கேள்விக்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், பதிலளித்து பேசுகையில், ''கர்நாடக கட்டட மற்றும் இதர தொழிலாளர்கள் நல வாரியத்தில், அரசு திட்டங்கள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, நிராகரிக்கப்படுவர். இதுவரை 7 லட்சம் தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,'' என்றார்.
வேலை வாய்ப்பு
காங்கிரஸ் எம்.எல்.சி., மஞ்சுநாத் பண்டாரியின் கேள்விக்கு, கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பதிலளித்து பேசுகையில், ''கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியம் சார்பில், அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்களின் குடும்பத்தினருக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்,'' என்றார்.
நிவாரண நிதி வழங்க முடியாது
பா.ஜ., - எம்.எல்.சி., பிரதாப் சிம்ஹா நாயக் கேள்விக்கு, விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி பதிலளித்து பேசுகையில், ''பாக்கு தோட்டங்களை தாக்கியுள்ள நோய்க்கு, எந்த விதமான நிவாரண நிதியும் வழங்க முடியாது. நோய் பரவாமல் கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக, ஏற்கனவே 21 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ரூ.50 கோடி வழங்கல்
ம.ஜ.த., - எம்.எல்.சி., மரிதிப்பேகவுடா கேள்விக்கு, சர்க்கரை மற்றும் ஜவுளி துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், பதிலளித்து பேசுகையில், ''மைசூரு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டு கரும்பு அரைப்பதற்கு 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அரைக்கப்பட்ட கரும்பு மூலம், 1,68,238 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விற்பனை செய்து விட்டோம்,'' என்றார்.
பணி நிரந்தரமில்லை
பா.ஜ., - எம்.எல்.சி., அ.தேவகவுடா கேள்விக்கு, உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் பதிலளித்து பேசுகையில், ''அரசு முதல் நிலை கல்லுாரிகளில் பணியாற்றும் 16,000 கவுரவ ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும்படி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், கவுரவ ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது,'' என்றார்.

