சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய உலக வங்கியிடம் ரூ.1,000 கோடி கடன்
சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய உலக வங்கியிடம் ரூ.1,000 கோடி கடன்
ADDED : அக் 24, 2024 12:26 AM

கெங்கேரி : ''சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, தண்ணீர் சீராக செல்ல, உலக வங்கியிடம் இருந்து 1,000 கோடி கடன் பெற்றுள்ளோம். பணிகள் நடக்கின்றன,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பலபகுதிகள் தீவுகளாக மாறின. அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கியவர்கள், ரப்பர் படகு மூலம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.
துணை முதல்வர் சிவகுமார் நேற்று எலஹங்கா கேந்திரியா விஹார் குடியிருப்பு வளாகம், பேட்ராயனபுரா, மரியன்னபள்ளி, கே.ஆர்.,புரம், ஸ்ரீசாய் லே - அவுட் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கெங்கேரி ஏரியில் மூழ்கி அண்ணன் - தங்கை இறந்தனர். தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்படும் மக்களுக்கு, தலா 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், முகாம்களில் தங்கவைக்கவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டங்களை இடித்து அகற்ற, சிலர் நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு வாங்கி உள்ளனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதுபோன்ற அவசர சூழ்நிலைகளில் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை, வெள்ளத்தை சமாளிக்க, பெங்களூரு கலெக்டருக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, தண்ணீர் சீராக செல்ல, உலக வங்கியிடம் இருந்து 1,000 கோடி கடன் பெற்றுள்ளோம். பணிகள் நடக்கின்றன. எலஹங்கா, கே.ஆர்.புரத்தில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.