ADDED : ஜன 27, 2026 01:23 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரு பண்ணை வீட்டில் இருந்து, 10,000 கிலோ வெடி பொருட்களை நேற்று முன்தினம் போலீசார் அதிரடியாக கைப்பற்றினர்.
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் ஹர்சூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில், வெடிபொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில், 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருட்கள் மற்றும் ஒன்பது பெட்டிகளில் டெட்டனேட்டர்கள், 12 பெட்டிகளில் பியூஸ் ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுலைமான் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே வெடிபொருள் சட்டத்தின் கீழ் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முதற்கட்ட விசாரணையில், இப்பொருட்கள் அப்பகுதியில் உள்ள மார்பிள் மற்றும் கல் குவாரிகளில் சட்டவிரோத சுரங்க வேலைகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு நவம்பரில், தேசிய தலைநகர் டில்லியில், செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பில், அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. இதனால், பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது.
குடியரசு தின விழாவுக்கு ஒருநாள் முன்னதாக இவ்வளவு பெரிய அளவில் வெடிபொருட்கள் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ராஜஸ்தானில் வெடிபொருள் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

