அட, என்னங்க சொல்றீங்க... 12 சதவீதம் தரமற்ற மசாலாவா? பிரபல நிறுவனங்களுக்கு வந்தது சிக்கல்
அட, என்னங்க சொல்றீங்க... 12 சதவீதம் தரமற்ற மசாலாவா? பிரபல நிறுவனங்களுக்கு வந்தது சிக்கல்
ADDED : ஆக 19, 2024 09:25 AM

டில்லி: பிரபல நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 12 சதவீத மசாலாப் பொருட்கள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
கட்டுப்பாடு
மசாலாப் பொருட்கள் விற்பனையில் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களாகும். சமீப காலமாக இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை பிரிட்டன், நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகள் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டன. குறிப்பாக, ஹாங்காங் இந்த நிறுவனங்களின் மசாலப் பொருட்களின் தயாரிப்புக்கு தடை விதித்து விட்டது.
சோதனை
இதனால், இந்த தயாரிப்புகள் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில், எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் 4,054 மாதிரிகளை எடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் சோதனைக்கு அனுப்பியது. கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 12 சதவீதம் மாதிரிகள், அதாவது 474 மாதிரிகள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம்
இதனிடையே, தங்களின் தயாரிப்புகள் தரமானவை என்றும், பாதுகாப்பானவை என்றும் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.
நடவடிக்கை
மாதிரிகளின் சோதனை விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்காத இருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை மதிப்பு
இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு நிதியாண்டில் ரூ. 8.75 லட்சம் கோடிக்கு அதிகமான சந்தை மதிப்பை கொண்ட மசாலப் பொருட்கள், கடந்த மார்ச் வரையிலான நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.3.75 லட்சம் கோடியாக உள்ளது.

