பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய 12 பேருக்கு '5 ஆண்டு'
பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய 12 பேருக்கு '5 ஆண்டு'
ADDED : பிப் 05, 2026 12:22 AM

பெலகாவி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில், 12 பேருக்கு பெலகாவி நீதிமன்றம், ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.
கர்நாடக மாநிலம், பெலகாவி நகரின் வன்டமுரி கிராமத்தில் வசிக்கும் இளைஞரும், இளம் பெண்ணும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.
இவர்களின் காதலை, குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் இருவரும், 2023 டிசம்பர் 10ல் ஊரை விட்டு ஓடினர்.
கோபத்தில் கொந்தளித்த பெண்ணின் குடும்பத்தினர், இளைஞரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பொருட்களை அடித்து நொறுக்கினர். இளைஞரின் தாயை வெளியே இழுத்து வந்து, உடைகளை கிழித்து நிர்வாணமாக்கி, கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாக, ஆண்கள், பெண்கள் என, 12 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையை முடித்து, 2024 ஏப்ரல் 22ல், பெலகாவியின் 10வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
விசாரித்த நீதிபதி மஞ்சுநாத், 12 பேருக்கும் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இவர்கள் மீது 26 சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவாகியுள்ளது. ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் தலா 1,000 ரூபாய் வீதம் அபராதமும் விதித்தார்.

