ADDED : நவ 24, 2024 11:00 PM

ஜெயநகர்:ஜெயநகரில் உள்ள தேசிய கல்லுாரியில் நேற்று 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. 16 மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
பெங்களூரு ஜெயநகரில் உள்ள தேசிய கல்லுாரியில் நேற்று 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரியின் பல்வேறு துறைகளை சேர்ந்த 16 மாணவ - மாணவியருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. கணிதம், இயற்பியல் துறையில் 52 மாணவ - மாணவியர் முதுகலை பட்டமும், 433 மாணவ - மாணவியர் பட்டய சான்றிதழும் பெற்றனர்.
மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கி பெங்களூரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் ஜெயகர் ஷெட்டி பாராட்டினார்.
அவர் பேசுகையில், ''மாணவர்களாகிய நீங்கள், ஆசிரியர்களால் சரியான பாதையில் வழி நடத்தப்பட்டு உள்ளீர்கள்.
உங்களது பெற்றோர் உங்களுக்காக நிறைய தியாகம் செய்துள்ளனர். ஒழுக்கமான கல்வி உங்களின் உறுதியான அடித்தளமாக இருக்க வேண்டும்.
''இன்று நீங்கள் பட்டம் பெற்றிருப்பதன் மூலம் சமூகத்தின் மிகப்பெரிய பொறுப்பான பங்காளி ஆகியுள்ளீர்கள்,'' என்றார்.
காந்தி நகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், 32க்கும் மேற்பட்ட படைப்புகளையும், 600க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரை எழுதிய, டாக்டர் எஸ்.எஸ்., அய்யங்கார், டாக்டர் சுப்பிரமணியன், கல்லுாரி தலைவர் வெங்கடசிவா ரெட்டி, செயலர் அருண்குமார், இணை செயலர் சுதாகர் இஸ்துரி, பொருளாளர் துவாரக நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெங்களூரு ஜெயநகரில் உள்ள நேஷனல் கல்லுாரியில், நேற்று 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. பெங்களூரு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் ஜெயகர் ஷெட்டி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பின், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.