சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
ADDED : ஜூலை 12, 2026 08:08 PM
நமது நிருபர்
தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. இதை எதிர்த்து, 2013ல் பிலிப்பைன்ஸ் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தை நாடியது. நெதர்லாந்தின் ஹே க் நகரில் உள்ள இந்த தீர்ப்பாயம் கடந்த 2016ல் சீனாவின் உரிமை கோரலுக்கு வரலாற்று அடிப்படை ஆதாரங்கள் ஏதும் இல்லை என கூறி தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை சீனா ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில், தீர்ப்பு வெளியாகி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அமெரிக்கா தலைமையில், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: தென் சீனக் கடலில், சீனா முன்வைக்கும் விரிவான கடல் உரிமை கோரலுக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது. கடலோர காவல் படை, ராணுவம் மற்றும் கடல்சார் துணைப் படைகளை பயன்படுத்தி, பிற நாடுகளின் சட்டபூர்வ கடல் மற்றும் வான்வழிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும், மீனவர்கள் மற்றும் பணியாளர்களை அச்சுறுத்துவதையும் ஏற்க முடியாது.
தென் சீனக் கடல் தொடர்பான அனைத்து பிராந்திய உரிமைத் தகராறுகளும், 1982ம் ஆண்டு ஐ.நா., கடல் சட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி, எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய 14 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதே போல் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுக்கு எதிராக தனியே அறிக்கை வெளியிட்டுள்ளது.
