ADDED : பிப் 19, 2025 06:29 PM
புதுடில்லி:சிறுமியை கர்ப்பிணியாக்கியவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு 14 வயது சிறுமியை 40 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார். கர்ப்பம் அடைந்த அந்தச் சிறுமி ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் நிம்மி சிசோடியா ஆஜராகி வாதாடினார்.
மரபணு பரிசோதனையில் சிறுமி பெற்றெடுத்த குழந்தைக்கு குற்றவாளியே தந்தை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜேஷ் குமார், சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு 14 ஆண்டுகள், அவளை மிரட்டியதற்காக மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி, சிறுமிக்கு இழப்பீடாக 16.5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

